Wednesday, August 28, 2013

அனுபவத்தின் பிரதிபலிப்பு


2013க்கு வரவேற்பு கொடுத்த பின்.... புதுப் பொலிவுடன் பல அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டே நாட்கள் நகர்ந்தன... சில திருமணங்கள்...சில பண்டிகைகள்...சில தேசிய தினங்கள்....சில அரசியல் நிகழ்வுகள்... அவற்றில் நம் மனதிற்கு பிடித்தது சில; நம் எண்ணத்திற்கு மாறாக பல... மனதை பாதித்த சம்பவங்கள்... மனதை பக்குவப்பட வைத்த அனுபங்கள்...சில மரணங்கள்... இப்படியாய் பல 'சில'க்கள் இன்று வரை....

அலுவல் பளு அதிகம் இருந்ததால் பதிவுகள் இல்லவே இல்லை... அதன் பிரதிபலிப்பு - எனக்கு தமிழின் மீதான காதல் இல்லை என்பதா ? அல்லது தமிழில் எழுத சரக்கு இல்லை என்பதா ? இப்படித்தானே உலகம் என்னைப் பார்க்கும்... Face Bookல் / தோழர்களின் Blogல் சில நல்ல கவிதைகள் / கட்டுரைகள் / பதிவுகள் படித்தேன். பரிந்துரைகள் எழுதினேன். சொந்தமாய் எழுத மட்டும் ?????

நாம் செய்வது நமக்கு சரியாய் இருக்கலாம். அடுத்தவர்கள் பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா ? இது சார்புள்ள சமூகம். நம் ஒவ்வொரு செயலும் வெளி உலகுக்கு நம்மைப் பற்றியான பிரதிபலிப்பை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.



டேய் ராமு...இப்படிப் பேசாதடா..தப்பா நினைப்பாங்க என்று எத்தனை முறை பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்...

நினச்சா நினச்சிட்டுப் போறாங்க... அவங்க தப்பா நினப்பாங்களாம்...அதனால இப்படி செய்யக் கூடாதாம்..என்ற முனுமுனுப்பும்... நினைவுகள் மலருதா ??

அப்படியான ஒரு பேச்சை / ஒரு செயலை இப்போ யோசிங்க...20 வருட அனுபவம் இன்னைக்கு நமக்கு தெரிஞ்சவங்க அந்த மாதிரி செயலோ பேச்சோ வெளிக்கொனரும் போது, எச்சரிக்கை செய்ய உதவியாய் இருக்கு.

சுப்பு...முதமுதலா வேலைக்குப் போகப் போற..பக்கத்து வீட்டுல officer இருக்காருல்ல...அதான்டா...நம்ம ராசாத்தி அப்பா...அவர்ட்ட போயி... வேலையில எப்படி நடந்துக்கனும்... எப்படி பழகனும்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துரு... அனுபவசாலிடா அப்படின்னு சுப்புவின் அம்மா சொன்னவுடன், சுப்புவுக்கு கோபம் வந்தது... அவர்ட்ட போய் நா ஏன் கேக்கனும் என்று மனதுக்ககுள் திட்டியபடி அம்மாவுக்காக அவர போயி பார்த்து...

வேலைக்குப் போன பின்னாடி, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், மேலதிகாரியிடம் கோபப்படும் போது, ராசாத்தியின் தந்தை சொன்ன வார்த்தை மனதை நெருட...வார்த்தைகளை மாற்றிப் பேசி... நல்ல வேளைடா..நீ வார்த்தையை விட்ருவியோன்னு பயந்தேன்...என்று நன்பன் சொன்ன நொடியில் மானசீகமாய் நன்றி சொல்லப்பட்டது ராசாத்தியின் தந்தைக்கும்... அவருடைய அனுபவத்துக்கும்... அம்மாவின் முகம் சுப்புவின் மனதில் ஏனோ பளிச்சிட்டது...

இந்த சுப்புவை ஒத்த அனுபவம் நம் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்... நடந்திருக்கும்.

சில செயல்களை செய்யும் முன் நாம் யோசிக்கிறோம்...சில செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்திய பின் திருத்திக் கொள்கிறோம். பல சந்தர்பங்களில் நாம் இதை செய்யப் போகிறோம் என்று சொன்னவுடன் எத்தனை கேள்விகள் எழுகின்றன? தோழர்களின் கருத்துக்கள் எத்தனை ? நமக்கு ஏன் இந்த சிந்தனை தோன்றவில்லை ? நமக்கு ஏன் இந்த கேள்வி எழவில்லை ?  என்று எத்தனை முறை நம்மை நாமே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.....இவை தானே அனுபவம்... அனுபவத்தின் பிரதிபலிப்பு..

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் 
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! 
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் 
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! 
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


கண்ணதாசன் வரிகள் நினைவில் வருகிறது.


நமக்கு எது சரின்னு படுதோ அத செய்வோம்ன்னு சொல்றதெல்லாம் கேக்கறதுக்கு நல்லா இருக்கும்... ஆனா, அடுத்தவங்க என்ன நினப்பாங்க அப்படீன்னு யோசிக்கறது தப்பில்லையே.. எல்லாரப் பத்தியுமா ? அதெப்படி முடியும் ? நம்ம செயலால / சொல்லால யாரெல்லாம் பாதிக்கப் படுவாங்கன்னு நாம் நினக்கிறோமோ அவங்களப் பத்தி யோசிங்க... உங்களுக்கும் அனுபவம் வரும்...யாரப் பத்தியெல்லாம் யோசிக்கனும்னு...

சரிதானுங்களே ??