Monday, October 29, 2012

ஈத் விடுமுறை 2012 - பாகம் இரெண்டு


பயணத்தின் தொடக்கம்

காலை வீடு பரபரப்பாய் இருந்தது. பயண ஆயத்தங்கள் துரிதமாய்… குழந்தைகள் மிதேஷும் ஸ்ம்ருதியும் விரைவில் எழுந்து தயாராகினர். தேவா தன் குடும்பத்துடன் 10 மணிக்கு வந்து சேர்ந்தார்… அவர் வீட்டிலும் அமளி துமளி தான் என்பதை பின்னர் புரிந்து கொண்டோம். ஸ்ம்ருதியும் அஷயாவும் எப்படியெல்லாம் பயணத்தை கழிக்கப் போகிறோம் என்ற பேச்சுக்களில் இறங்கினர். நானும் தேவாவும் திட்டத்தை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொண்டோம்… முதலில் விமான நிலையம் சென்று, கார் எடுத்துக்கொள்வோம்… பின்னர் அபுதாபி கிரான்ட் மாஸ்க் (Grand Mosque) பின்னர் அல் ஐன் zoo, Jebel Hefet அதன் பின் மறு நாள் காலையுடன் வீடு திரும்புவதாய் சொன்னோம். என் மனைவியும் தேவாவின் மனைவியும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். ஒற்றை வரியில் இங்கே இந்த சந்தேக வரி முடிந்தாலும், இதற்கு நேரம் கொஞ்சம் வெகுவாகவே செலவு செய்யப்பட்டது.
இப்படி செய்தால் என்ன? என்ற தாய் குலங்களின் கேள்விக்கு OK என்று தோளை காது வரை தூக்கி, தலையை சாய்த்து, உதட்டைப் பிதுக்கி வடிவேலு பானியில் சொல்ல அந்த OK, பயனம் முழுவதிலுமே தொடர்ந்தது.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு, 10.45 மணிக்கு கீழே இறங்கினோம்… தேவாவின் வண்டியில் விமான நிலையம் நோக்கி பயணித்தோம்.
எங்கப்பா போறோம் ? என்று மிதேஷ் தொடங்க, முதல்ல விமான நிலயம் என்றவுடன் ‘ஏய்….’ என்று நக்கலாக சொல்லிவிட்டு, ஒழுங்கா சொல்லுப்பா என்றான். மீண்டும் விமான நிலையம் என்ற வார்த்தை கேட்டு, போப்பா என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். அவனிடம் பின் முழு திட்டத்தையும் விவரிக்க வேண்டியதாயிற்று.
10 நிமிட பயணத்திற்குப் பின், ஏம்ப்பா, அந்த பேக் எடுத்தீட்டீங்களா என்று தேவி கேட்க, என் பையன் இல்லை என்பதை ஆம் என்று சொல்வது போல் தலை அசைக்க, தேவா, திருப்பு வண்டிய என்றதும், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தோம். நம்ம ஊரா இருந்தால், அப்படியே திருப்பி இருக்கலாம்…. இல்லையே…. என்று சிவாஜியின் பானியில் சொல்லி நாங்களே சிரித்துக் கொண்டோம். ஒருவழியாய், அந்த பேக் எடுத்துட்டு ஆரம்பித்த இடத்திலிருந்து தொடங்கினோம்.
விமான நிலையம் அருகில் வந்ததும், தேவா அலை பேசியில், வாடகை கார் கம்பெனியை அழைத்து நாங்கள் வந்து கொண்டிருக்கும் விவரத்தை சொல்லி, நாங்கள் வந்து கொண்டிருந்த வண்டியை விமான நிலைய தரிப்பிடத்தில் நிறுத்தினோம். தரிப்பிடத்தை, Parking என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அதை அரேபியர்கள் சொல்வதானால், Barking என்று சொல்வார்கள் ; மலையாளிகள் மூக்கினால் அதை விளம்புவார்கள்.. ஓ! பார்க்கிங் அல்லே! அது சரி!! என்று பேசி சிரித்து குதூகலத்துடன் வண்டியிலிருந்து இறங்கி நானும் தேவாவும் வாடகை கார் கம்பெனியின் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
அலைபேசியில் கான் அவர்களை அழைத்து, எப்படி வரவேண்டும் எனக் கேட்டால், வண்டியை நிறுத்திவிட்டு வாருங்கள் என்கிறார். என்ன கொடுமை சரவணன் இது என்று பேசிக் கொண்டே, கார் கம்பெனியை தேடிக் கண்டுபிடித்து, சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு (பணம் கொடுத்து, கையொப்பமிட்டு, தேவையான தஸ்தாவேஜுகளையும் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை கேட்டறிந்து) கார் இருக்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்த சாரதியுடன் நான் கிளம்ப, எங்கு வரவேண்டும் என்று தேவா அறிவுறுத்திவிட்டு, நாங்கள் வந்த வண்டியை எடுக்க தேவா கிளம்பினார். வேறிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, வாடகை காரில் எங்கள் பயணம் அபுதாபியை நோக்கி….   
இதெல்லாம், ஒழுங்கா Plan செய்யக் கூடாதா என்று என் மனைவி தேவியும் தேவாவின் மனைவி ஸ்ரீதேவியும் வினவ, (40 நிமிடம் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமல் வண்டியில் அமர்ந்திருந்ததன் விளைவு) முன் தின நடப்புகளை சுருக்கமாய் விவரித்துக் கொண்டே மெதுவாய் கிளம்பினோம். (முதல் பாகம்…. ஆங்… அதேதான்…) போகும் வழியில் முதல் Petrol Stationல் வண்டியை நிறுத்தி தேநீர் அருந்த முடிவு செய்தோம். முடிவு நம் கையில் இல்லையே…. ஒவ்வொரு petrol stationஐயும் தாண்டிய பிறகு தான் பார்த்தோம்… போகும் வழியில் வீடுகள் இருந்ததைப் பார்த்து, இங்கு யாராவது இருக்கிறார்களா என்று கேள்வி பிறந்து, பின்னர் இருப்பவர்கள் எப்படி தங்கள் தேவையை சமாளிப்பார்கள்? என்று அவர்களுக்காய் கவலைப்பட்டு….
இடையில் ஸ்ம்ரிதி முதலில் zoo போக வேண்டும் எனத் தொடங்க, சமாதானப்படுத்த நாங்கள் பட்டபாடு…. உஸ்… . Zoo வழியில் இல்லை… முதலில் அபுதாபி போய்விட்டு பின்னர் zoo போகலாம் என்று அனைவரும் பலவாறாய் பேசி…. எப்பா….! (பெருமூச்சு தான்…)
போகும் வழியில் பாலைவனம்… இரெண்டு பக்கமும். இங்க 4 ஏக்கர் வாங்கிப் போடலாமா என்று கேள்வி கேட்டு, வேண்டாம் என்ற பதிலை நாங்களே கூறிக்கொண்டு…. UAEல மின்சாரம் எப்படி சமாளிக்கறாங்க? என்ற பதில் தெரியாத கேள்விகளை கேட்டுக் கொண்டு…. இருக்கும் ஒரே தமிழ் FM 89.5… அதுவும் துபாய் தாண்டினா காத்து தான் வந்தது… மிச்ச வானொலி நிலையங்கள் அனைத்திலும் பாடல் கேட்கிறது ; தமிழ் பாடல் மட்டும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் 89.5 FM அலைவரிசையை திட்டிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. 89.5 FM அலைவரிசை இதை கவணிக்குமா ??
அனைவரும் பேசிக்கொண்டே ஒரு வழியாய் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினோம். சிறிது நேரம் களைப்பாறிய பின், மீண்டும் தொடங்கியது பயணம்… பேச்சுக்கள் ; கேலிகள் என்று பயணத்தைப் போல அதுவும் தொடர்ந்தது. சாலையில், மற்றொரு வண்டியில் ஒரு ஆடு போய்க் கொண்டிருந்தது…. நாளைய ஈத் திருநாளில் தான் அடுத்தவருக்கு இரையாகப் போகிறோம் என்பதை சிறிதும் அறியாமல்… பரிதாபத்தோடு அந்த வாயில்லா பிராணியை பார்த்துக் கொண்டே…..
அபுதாபியின் எல்லை எங்களை வரவேற்றது… நம்ம ஊர் போல ‘அபுதாபி நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பலகை இல்லை! குறை பட்டுக் கொண்டோம்… Grand Mosque எங்களின் இடது புறத்தில். வெளியிலிருந்து பார்த்தோம்… எப்படி சென்றடைவது… நான்கு பேரிடம் வழி கேட்டு… U Turn செய்து, நேராக சென்று ஒரு பாலத்தில் ஏறி, இறங்கும் போது இடது பக்கமா வலது பக்கமா எனக் கேட்டுக் கொண்டே, இடது பக்கம் வளைந்து…
மசூதியின் வாயில் தெரிந்தது. ஒரு சின்ன இல்லை பெரிய அளவில் தயக்கம்… விடுமுறை நாள் – ஒருவரும் கண்ணில் படவில்லை. 2 நுழைவாயில்களைப் பார்த்தோம்… 2ம் திறந்திருக்க வில்லை. இன்னும் எத்தனை நுழைவாயில்கள் இருக்கு? திறந்திருக்கா இல்லையா? ஒரு வேளை இன்று அடைப்போ? அடைபட்டிருந்தால், என்ன செய்வது ? இவ்வளவு தூரம் வந்த பயணம் Wasteஆ?? வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டியது தான்… உதடுகள் சொன்னாலும், மனதில், மசூதியின் உள்ளே போக முடியாததை எண்ணி வலி…
நுழைவாயில் மூடி தான் இருக்கு… இங்கேயே நிற்பதில் எந்த வித பயனும் இல்லை… மசூதியை ஒரு முறை சுற்றி வருவோம்… ஏதாவது வழி இருக்கும்… மனதில் நம்பிக்கை லேசாக துளிர்விட்டுக் கொண்டுதான் இருந்தது…கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணியை பார்க்கும் போது இருப்பது போல்….
இந்தியா வென்றதா ? மசூதியின் உள்ளே செல்ல முடிந்ததா? யாரும் பேசிக் கொள்ளவில்லை… அடுத்த பாகத்தில் தொடர்வோம்……….





2 comments:

  1. இனிய அனுபவம்... தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்

    ReplyDelete